பக்கங்கள்

Thursday, November 13, 2014

பிரதமர் மோடியின் குஜராத்

குஜராத் வளர்ச்சி பாதையில் இருப்பதாகச் சொல்லி எல்லா ஊடகங்களும் போட்டி போட்டு செய்தி வெளியிட்டன.

இப்போது வந்த செய்தி ஒன்றைப் பற்றி தெரியப் படுத்துகிறது.




"காந்திநகர்: குஜராத்திலுள்ள அங்கன்வாடிகளில் கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், பெரும்பாலான பள்ளிகள் மரத்தடியில் நடக்கிறது எனவும் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை தெரிவித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில் மத்திய கணக்குத் தணிக்கைத் துறை சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வு அறிக்கையை நேற்று (11ஆம் தேதி) குஜராத் சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது.

அந்த அறிக்கையில், ''குஜராத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடிகளில் கழிவறை வசதி இல்லை. இங்குள்ள பெரும்பாலான பள்ளிகள் மரத்தடியிலும், தற்காலிக முகாம்களிலும் இயங்கி வருகிறது. இலவச மற்றும் கட்டாய கல்விச் சட்டம் 2009 மற்றும் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பலவேறு பள்ளிகளில்  கட்டிட வசதிகள் இல்லை. போதுமான ஆசிரியர்கள் மற்றும் குடிநீர் போன்ற அடிப்படை வசதிகளும் இல்லை.

பஞ்சாயத்து ராஜ் மூலம் 31,545 தொடக்கப்பள்ளிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதில், 10 மாவட்டங்களில் உள்ள 14,497 தொடக்கப் பள்ளிகளில் ஆய்வு நடத்தியதில் 48 பள்ளிகளில் கட்டிடங்கள் இல்லை. 56 பள்ளிகளில் கட்டிடங்கள் மோசமான நிலையில் உள்ளன'' எனக் கூறப்பட்டுள்ளது."

Monday, October 27, 2014

தமிழ் உலக மொழி ஆகுமா? - தி இந்து

இன்றைய தமிழ் - தி இந்து வில் வந்த கட்டுரை.

இ. அண்ணாமலை என்கிற பேராசிரியர் எழுதிய கட்டுரை.

-----

'தமிழ் கூறு நல்லுலகு’ என்னும் தொடர் தமிழ் உலகத்தைக் குறிக்கிறது. தமிழ் உலகம் என்பது பூமியில் தமிழ் வழங்கும் பகுதி. இந்தப் பகுதி உலகம் முழுவதிலும் பரவியிருக்கிறது என்னும் பொருளில் ‘உலகளாவிய தமிழ்’ என்னும் தொடர் வழங்குகிறது.
இதிலிருந்து பிறந்ததுதான் உலகத் தமிழ் என்று புதிதாக வழக்குக்கு வந்துள்ள தொகைச்சொல். தமிழ் உலகத்தை உலகத் தமிழ் என்று மாற்றிப் போட்ட சொல்.
தமிழர்கள் பிழைப்பைத் தேடி உலகம் முழுவதும் சென்று குடியேறியிருக்கிறார்கள் என்னும் நிதர்சனத்தைப் பிரகடனப்படுத்தும் சொல். தமிழர் வரலாற்றில் புலப் பெயர்வு புதிது அல்ல. ஆனால், பொருளாதாரத்தில் வளர்ந்துள்ள அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் குடியேறிய பிறகே, உலகத் தமிழ் என்ற சொல் வழக்கில் பெருகிவருகிறது. இந்த நாடுகளுக்குப் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெரும்பாலும் பொருளாதார வகையில் அந்த நாடுகளில் மத்தியதர வர்க்கத்தினர்.
தாய்நாட்டில் வாழ்ந்த முறையாலும், கல்வியால் தமிழ் இலக்கியக் கலாச்சாரத்தோடு பெற்ற பிணைப்பாலும் இவர்களுக்குத் தமிழோடு உள்ள உறவு உணர்ச்சிபூர்வமானது மட்டுமல்ல, அறிவு பூர்வமானதும் கூட. தமிழ் இலக்கியம் இவர்கள் வசிக்கும் நாட்டின் மத்தியதர வர்க்கத்தினரிடமிருந்து தனித்து அடையாளம் காட்டும் குறியீடும் ஆகும். இவற்றால், உலகத் தமிழ் என்னும் சொல்லுக்கு உலகம் முழுவதும் பரவியிருக்கும் தமிழ் என்னும் பொருளுக்கு மேலாக, உலகத் தகுதிபெற்ற மொழி என்னும் பொருளையும் இவர்கள் தருகிறார்கள். இந்தப் பொருள் நிலைபெற உலகின் பல பகுதிகளையும் இணைக்கும் இணையம் போன்ற புதிய தொழில்நுட்பம் துணைசெய்கிறது.
உலக மொழி
உலக மொழி என்றால் உலகளாவிய ஆட்சிமை உடைய மொழி என்று பொருள். உலக ஆட்சிமை என்பது நாடு கடந்து அறிவு, அறிவியல், தொழில்நுட்பம், பெருவணிகம் ஆகிய துறைகளில் ஒருவர் பங்குபெறத் தேவை என்று கருதப்படும் தகுதி. நாடுகளுக்கிடையே அரசியல் உறவுக்கும் கருத்துப் பரிமாற்றத்துக்கும் பயன்படும் தகுதி உடைய மொழி என்று பொருள். இந்தத் தகுதி இன்று ஆங்கிலத்துக்கு இருக்கிறது. இந்தப் பொருளில் தமிழை உலக மொழி என்று சொல்ல முடியாது. உலக ஆங்கிலம் என்பதில் உள்ள பொருள் உலகத் தமிழ் என்பதில் இல்லை.
கவன ஈர்ப்பு
பிற நாட்டு மொழி பேசுபவர்கள் ஒரு மொழியை நாடி வரும்போது அந்த மொழியின்மீது உலகம் கவனம் செலுத்துகிறது எனலாம். ஒரு மொழி உலகக் கவனம் பெறுவதற்கு, பிற மொழி பேசுபவர்களுக்கு அந்த மொழியின்மீது நாட்டம் ஏற்படுவது முதல் படி. அரசியல், பொருளாதார பலம் இல்லாத ஒரு மொழி, உலக அளவில் நாட்டம் பெற அதனிடம் என்ன இருக்க வேண்டும் என்று பார்க்கலாம்.
ஒரு மொழியின் முற்காலத்தில் இலக்கியம், தத்துவம், அறிவியல் முதலான துறை சார்ந்த சிறந்த எழுத்துகள் இருப்பது அந்த மொழிக்கு இருக்கும் ஈர்ப்புச் சக்திகளில் ஒன்று. இவை கிரேக்கம், லத்தீன், அரேபியம், சமஸ்கிருதம் முதலிய செம்மொழிகளில் உண்டு. பழந் தமிழுக்கும் இந்த ஈர்ப்புச் சக்தி உண்டு. ஆனால், இத்தகைய மொழிகளில் ஏற்படும் நாட்டம் கல்வித் துறையில் உள்ளவர்களிடமே முடங்கிவிடுகிறது; பொதுமக்களைப் பற்றுவதில்லை. மேலும், சிறந்த எழுத்துகள் பழந்தமிழில் மட்டும் இருந்தால், இன்றைய தமிழுக்குப் பெருங்காயம் இருந்த டப்பா என்ற பெயரே இருக்கும்.
மொழியில் உள்ள எழுத்துகள்
எனவே, இன்றைய தமிழில் உலகைக் கவர என்ன இருக்கிறது என்று பார்க்க வேண்டும். அறிவியலில் ஒற்றை மொழி ஆதிக்கம் உள்ள இன்றைய சூழ் நிலையில், தமிழில் வெளிவரும் அறிவியல் எழுத்து களுக்கு உலகக் கவர்ச்சி இருக்காது; இருக்க முடியாது. ஆனால், பிற அறிவுத் துறைகளில் அது இருக்கலாம். இவற்றில் சுயமான சிந்தனைகளுக்கு - தமிழ் அனுபவத்தில் பிறக்கும் சிந்தனைகளுக்கு - உலகை ஈர்க்கும் வாய்ப்பு உண்டு. பிரான்ஸைச் சேர்ந்த சார்த்தருடையதுபோல் புதிய தத்துவச் சிந்னைகள் தமிழில் தோன்றினால், தெரிதாவைப் போல் இலக்கியத்தையும் கலாச்சாரத்தையும் விளங்கிக் கொள்ளத் தமிழில் புதிய வழிமுறை ஏற்பட்டால், இத்தாலியைச் சேர்ந்த கிராம்சியின் பார்வையைப் போல் புது நோக்குள்ள அரசியல் தத்துவம் தமிழில் எழுந்தால், பிரேசிலைச் சேர்ந்த பாலோ ஃபிரைரே சிந்தித்ததைப் போல் கீழிருந்து பார்க்கும் கல்விச் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், உலகம் தமிழின் பக்கம் திரும்பிப் பார்க்கும். இப்படி இன்னும் இன்னும் எவ்வளவோ சொல்லலாம்.
நம் நாட்டிலேயே காந்தியின் அரசியல் போராட்டச் சிந்தனைகள் போன்றவை சுயமாகத் தமிழில் தோன்றுவது சில உதாரணங்கள். இத்தகைய கவன ஈர்ப்பு பிற மொழி பேசும் அறிவுஜீவிகளிடமே முதலில் தோன்றலாம்; ஆங்கில மொழிபெயர்ப்பின் மூலமே அவர்கள் அதைப் பெறலாம்.
உலகத் தகுதி பெறும் மொழி
தமிழ்ச் சமூகம் இப்படிப்பட்ட சிந்தனையாளர்களை ஏன் படைக்க முடியவில்லை? மேலே சொன்னது போன்ற அறிவுத் துறைகளில் தமிழ் பேசும் புலமை யாளர்கள் இருக்கிறார்கள். இவர்கள் ஆங்கிலத்தின்வழி கல்வி கற்றிருந்தாலும், முற்றும் கற்ற தங்கள் துறைசார்ந்த அறிவிலிருந்து புதிய சிந்தனைகளைத் தமிழில் தர அறிவுத்தடை இருக்க முடியாது; சுய சிந்தனைகளுக்குக் கலைச்சொல் தடையும் இருக்க முடியாது; மனத்தடையே இருக்க முடியும். நம்முடைய கல்வி அமைப்பு, ஆங்கிலத்தில் எழுதினாலே பதவி முன்னேற்றம், உலக அரங்குகளில் பங்கேற்பு என்று செயல்படுகிறது. தமிழில் புதிய சிந்தனைகளைத் தர இந்த நிலை மாற வேண்டும் என்று காத்திருக்கத் தேவை இல்லை. தருவதற்குச் சிலரே போதும். மேலே சொன்ன எடுத்துக்காட்டுகளில் சிந்தனையாளர்கள் அவரவர் மொழிகளில் சிலரே. எத்தனையோ கோடித் தமிழரில் திருவள்ளுவர் ஒருவரே. தமிழ்ச் சமூகத்திலிருந்து ஆழச் சிந்திப்போர் சிலர் உருவானால், அவர்கள் தங்கள் சிந்தனைகளைத் தமிழில் எழுதினால், இது முடியும். தமிழ் உலகத் தகுதி பெற்ற மொழியாக முன்னேறும்.
பல துறைகளிலிருந்தும் வரும் புதிய அறிவுச் சிந்தனையால் மட்டுமல்ல, சிறந்த இலக்கியப் படைப்பும் தமிழ் உலகக் கவனம் பெற உதவும். கொலம்பியாவின் காப்ரியல் கார்ஸியா மார்க்வெஸின் இலக்கிய எழுத்துகள் ஸ்பானிய மொழிப் படைப்பை உலகம் தேடச் செய்கின்றன. இதைப் போன்றே துருக்கியைச் சேர்ந்த ஒரான் பாமுக் முதலானோரின் எழுத்துகள் அவர்களுடைய மொழிகளை, மொழிப் பன்மை குறைந்துவரும் நிலையிலும், உலக அளவில் இடம்பெறச் செய்கின்றன. இதைச் செய்யத் தமிழ் இலக்கியப் படைப்புகளுக்கு நல்ல ஆங்கில மொழி பெயர்ப்பு வேண்டும்; அதன் வழியே அவை மற்ற மொழிகளுக்குப் போய்ச்சேரும். உலகளாவிய ஆங்கில ஆதிக்கத்தின் ஒரு நன்மை இது.
இந்த வழிகளில் இன்றைய தமிழ், உலகக் கவனம் பெற்று உலகத் தகுதி பெறும்போதே தமிழை உலக மொழி என்று சொல்வதில் நியாயம் இருக்கும். இந்த நிலை வருவதற்கு அரசின் ஆதரவு அவசியம் இல்லை. இது தமிழர்கள் தாங்களாகவே செய்ய வேண்டிய ஒன்று; செய்ய முடிகிற ஒன்று. இதைச் செய்ய முயலாமல், தங்கள் குறையை மற்றவர்மேல் - வேறு மொழி மேலோ, வேறு சமூகத்தின் மேலோ - சுமத்துவதைச் சொந்தக் குறையை மறைக்கும் செயலாகவே கொள்ள வேண்டும்.
- இ. அண்ணாமலை,
சிகாகோ பல்கலைக்கழகத்தில் தெற்காசியத் துறையில் வருகைதரு பேராசிரியர்.
தொடர்புக்கு: eannamalai38@gmail.com

தமிழ் உலக மொழி ஆகுமா? - தி இந்து

Friday, July 12, 2013

தமிழை வாசிக்க வைப்போம் - ஜி. ஜெயராஜ்

திரு. ஜெயராஜ்  தினமணியில்  எழுதிய  கட்டுரை  
"தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' என்பது தேசியக் கவியின் ஆசை. ஆனால், தமிழகத்தில் பார்க்கும் இடமெல்லாம் தமிழாக இருக்கிறதா என்பதே ஆய்வுக்குரியது.
இந்தியாவில் அகழ்ந்தெடுக்கப்பட்ட சுமார் ஒரு லட்சம் கல்வெட்டுகளில் 60 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழ் மொழியில் எழுதப்பட்டவை.
இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அலுவல் மொழியாகவும் பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் சுமார் 8 கோடிக்கும் அதிகமானோர் பேசும் மொழியாகவும் இருக்கிறது தமிழ்.
2,500 ஆண்டு பழமை வாய்ந்த "செம்மொழியாக' தமிழ் இருக்கிறது என்பது தமிழர்கள் எல்லோருக்கும் பெருமை தரக்கூடியதாக இருந்தபோதும், உணர்வுப்பூர்வமாக தமிழ் நம்மோடு இருக்கிறதா?
மொழி தெரியாத ஏதோ ஒரு இடத்தில் நாம் தனித்து விடப்படும்போது, உதவிசெய்ய வருபவர் தமிழில் பேசினால் எவ்வளவு மகிழ்ச்சி ஏற்படும்? நாம் பாதுகாக்கப்பட்டு விடுவோம் என்ற உணர்வே அது. அதாவது தமிழ் மொழி நம்மைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை பிறக்கிறது அல்லவா? அது மொழியின்மீது நமக்கு உள்ள ஆழ்ந்த உறவைக் காட்டுகிறது. அது நமது முதல் உறவு, நமது அடையாளம்; பிறகுதான் தாய், தந்தை எல்லாம்.
தமிழ் மொழியிலிருந்து தனிமைப்படும்போது பெறுகின்ற அந்த உணர்வை, நாம் தமிழோடு இருக்கும்போது மறந்து விடுகிறோம். நமது அடையாளத்தையே நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு பல உதாரணங்களைக் கூற முடியும். முதலில் நாம் பார்க்கும் இடமெல்லாம் தமிழ் இருக்கிறதா என்று ஒருமுறை சுற்று முற்றும் பார்த்தாலே போதும். வணிக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளின் பெயர்ப் பலகைகள் நம் கண்ணெதிரே தெரிகின்றவை. அவற்றில் நூற்றுக்கு 75 சதவீதம் தமிழ் பிரதானமாக இல்லை.
தமிழ் நாட்டின் முக்கிய நகரங்களில் வலம் வந்தால் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழை விட ஆங்கிலமே ஆதிக்கம் செலுத்துகிறது. கொட்டை எழுத்துகளில் ஆங்கிலத்தைப் பிரதானமாக எழுதி வைத்திருக்கின்றனர், அல்லது ஆங்கில மொழியை அப்படியே தமிழ் வார்த்தையாக எழுதிவிடுகின்றனர்.
ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை ஆண்டதால் ஏற்பட்ட பாதிப்பா, அல்லது ஆங்கிலமே உலக அளவிலான தொடர்பு மொழி என்ற மாயையால் இதைக் கையாள்கின்றனரா என்று தெரியவில்லை. இந்த நிலை நமது அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம், ஆந்திரம் போன்றவற்றில் இல்லை.
கேரளத்தில் வணிக நிறுவனப் பெயர்ப் பலகைகளில் பெரும்பாலும் மலையாளமே பிரதானமாக இடம்பெற்றிருக்கிறது. ஆங்கிலம் இரண்டாவதாக சிறிய அளவில் இருக்கிறது. அண்மையில் திருவனந்தபுரம் சென்றபோது, அவ்வப்போது இது எந்த ஊர் என, தமிழ் மட்டுமே தெரிந்த எங்களுடைய கார் டிரைவர் கேட்டுக்கொண்டே வந்தார். அத்தனை பெயர்ப் பலகைகளிலும் மலையாள மொழியே பெரிதாகக் காணப்பட்டது. ஆங்கிலம் சிறிய எழுத்தில் இருந்ததால் அடையாளம்காண முடியவில்லை.
ஆங்கிலத்தில் பேசுவதையே இன்றைக்கும் தமிழர்கள் நாகரிகமாகக் கருதிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் எந்த ஒரு நிகழ்ச்சி நடத்தினாலும், அழைப்பிதழை ஆங்கிலத்தில் அச்சிடுகின்றனர்.
பள்ளி, கல்லூரி அழைப்பிதழ்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் அச்சிடப்படுகின்றன.
தமிழக அரசு அலுவலகங்களில் இன்னமும் ஆங்கிலம் கோலோச்சுகிறது. நீதிமன்றங்களிலும் ஆங்கிலத்தில்தான் வாதங்கள் எடுத்துரைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் தமிழுணர்வு மங்கிப்போகாமல் இருக்க வேண்டுமென்றால் பார்க்கும் இடங்களிலெல்லாம் தமிழை வாசிக்க வைப்பதுதான் நமது மொழியின் வெற்றிக்கு முதல்படியாக இருக்கும்."

Sunday, May 12, 2013

சரப்ஜித் சிங் - உளவாளி / குடிகாரர் /வீர மைந்தர்


சரப்ஜித் சிங் - பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர். பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டவர் எனக் கூறி பாகிஸ்தானிய சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை -
                                                   தியாகி என்று சொல்கிறார்கள் - 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுகிறார் - மூன்று நாள் அரசு விடுமுறை விடப்படுகிறது - ஒரு கோடி இருபத்தி ஐந்து லட்சம் ரூபாய் அவரது குடும்பத்தினருக்கு வழங்கப் படுகிறது .... அரசியல்வாதிகள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள் என பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

1991 ஆம் ஆண்டு கைது செய்து சிறையிலடைக்கப்பட்டு 2013 வரை சிறையில் இருந்த ஒரு மனிதன் இறந்ததற்கு இந்திய அரசும், ஊடகங்களும் நடத்தும் தேசிய உணர்வும், முதல் பக்க செய்திகளும், எனக்கு ஒரு பக்கம் மிகுந்த வேதனையைத்தான் தருவிக்கிறது. சரப்ஜித் சிங் சிறையில் கொடூரமாய்த் தாக்கப்பட்டது வருத்தம்தான். இந்தச் சமயத்தில் அவரைப் பற்றி எழுதுவது வேதனையாக இருந்தாலும் வேறு வழியில்லை.  

இந்திய அரசின் உளவாளி  என்று அவரை பாகிஸ்தான் குற்றம் சாட்டியிருக்கிறது. இந்தியா இல்லை என்றும், அவரது குடும்பத்தினர் குடிமயக்கத்தில் பாகிஸ்தானுக்குள்ளே சென்றுவிட்டார் என்றும் சொல்லுகிறார்கள். இந்தியாவின் உளவாளி அவர் இல்லையென்றால் "அவர் இந்தியாவின் வீர மைந்தர்" என்று இந்தியப் பிரதமர் ஏன் சொன்னார் என்று தெரியவில்லை. என்ன செய்து இந்தியாவின் வீரத்தைக் காண்பித்தார் என்றுதான் தெரியவில்லை.


இந்தியாவில் பாகிஸ்தானிய உளவாளிகள் செய்வது தவறென்றால் அங்கேயும் நமது உளவாளிகள் குழப்பம் விளைவிப்பது தவறுதான். சரி சிங் உளவாளி இல்லையென்றால் ஏன் அவர் வீர மைந்தர்? அநியாயமாக தண்டனை கொடுக்கப் பட்டிருக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகள் இந்தியா என்ன செய்து  கொண்டிருந்தது? {இரண்டு நாட்களாக சோனியா விட்டு முன்பு சீக்கியர்கள் நடத்தும் போராட்டம் இறந்த சிங்குக்கு அனவருக் கொடுக்கும் அனுதாபத்தின் முன்பு ஒன்றுமே இல்லாமல் போய் விட்டது - 3000 சிங்குகள் கொல்லப் பட்ட வழக்கில் இருந்து முன்னாள் காங்கிரஸ் எம்.பி சஜ்ஜன் சிங் விடுதலை செய்யப் பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தெரிவித்து சீக்கியர்கள் நடத்துப் போராட்டம்}

தவறாய்க் கைது செய்யப் படுவது தடுக்கப் பட வேண்டும் என்றால், மற்ற நாடுகளில் இந்தியப் பிரஜைகள் இறப்பது இந்தியாவின் வீரம் என்றால், அடிக்கடி சுட்டுக் கொள்ளப்படும் தமிழக மீனவர்கள்தான் இந்தியாவின் வீர மைந்தர்கள்.

ஆனால் இலங்கையினால் கொல்லப்படும் தமிழர்களை யாரும் வீர இந்தியர் என்று சொல்வதில்லையே  ஏன்? {இந்தியர்கள் என்றே சொல்லுவதில்லை அப்புறம் என்ன வீர இந்தியர்}

குண்டுகள் முழங்க அரசு அடக்கம் செய்திருக்கிறார்களா?

ஊடகங்கள் முதல் பக்க செய்திகளையாவது வெளியிட்டு இருக்கின்றனவா?  இவர்கள் அப்பாவிகள் இல்லையா? இலங்கை காட்டுமிராண்டி அரசு இல்லையா?

அநியாயமாய்ச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழக மீனவர்களை {ஏறக்குறைய முப்பது மீனவர்களை } விடுவிக்க வேண்டி தங்கச்சி மடத்தில் நடத்திய போராட்டம் பற்றி சிங்கின் மரணம் குறித்து முதல் பக்கத்தில் வெளியிட்ட பத்திரிக்கை கடைசிப்பக்கத்தில் கூட இந்தச் செய்தியை வெளியிட வில்லை.  நல்ல ஊடகங்கள்.

எந்த அரசும் இதைக்  கண்டுகொள்வதும் இல்லை. ஒருவேளை இறப்பது சிங் என்றால் தான் கண்டு கொள்வார்களோ? அல்லது சுடுவது பாகிஸ்தான் என்றால்தான் இறப்பவர்கள் வீரர்கள் ஆவார்களோ என்னவோ... நல்ல அரசுகள்.

குடிமயக்கத்தில் போனால் வீரர்கள் --- தொழிலுக்குப் போனால் திமிர் பிடித்தவர்கள்... பாகிஸ்தான் செய்தால் கொடூரம் -- இலங்கை செய்தால் பாதுகாப்புக் காரணங்கள்...

ஆக மொத்தம் ---- சாதி அரசியலுக்கும் மத அரசியலுக்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை... பாதிக்கப்படுவதும் பிரிக்கப் படுவதும் தமிழர்கள்தான்.



Sunday, May 5, 2013

காவல் தெய்வம் அய்யா


அய்யா எல்லா இனமும் நல்ல மனதோடு வாழ வேண்டும் என்கிற ஒரு பெரும் தலைவர், என்ற செய்திகளும்..... மக்கள் சாமியாகக் கருதும் ஒரு தலைவர் என்றும்..... அய்யாவைக் கைது செய்து மனித உரிமைக்கு எதிரான செயல் என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டே .... ஆனால் தலைப்புக்குத் தலைப்பு வன்னியர் , வன்னியர், வன்னியர்.... என்று எழுதிக் கொண்டிருக்கும் சிலர் இருக்கிறார்கள்...

அதற்கான செய்திகளைத் தொடர்ந்து படித்து, மனித உரிமையையும், சமத்துவத்தையும் நிலை நிறுத்தி, அய்யாவை சாமியாக, காவல் தெய்வமாக  ஏற்றுக் கொள்ளும் நண்பர்கள் பின்வரும் வலையில் தொடர்ந்து படிக்கலாம். இதன் வழியாக அய்யாவின் வழியில், கண்ணசைத்து.... நாமும் மனித நேயத்தையும், மனித உரிமையையும் நிலை நாட்டலாம்...

அய்யா அனுபவிக்கும் துன்பங்கள்

http://arulgreen.blogspot.com/2013/05/Human-rights-in-Tamil-Nadu-PMK.html

http://arulgreen.blogspot.com/2013/05/Marakkanam-Vanniyar-murder-Makkal-tv.html


இது ஒரு புறம் இருக்க....

மறு பக்கத்தையும் பார்க்க வேண்டுமல்லவா...

அய்யாவின் பயோ டேட்டா  ---- இங்கே படியுங்கள் 

அய்யா பயப்படுகிறாரா --- பதில் சொல்ல இங்கே படியுங்கள் 

தண்டனை சரி ----- என்கிறார் மற்றொருவர்...

வேட்டுவோருக்கு கேள்வி கேட்கிறார்.... கேள்விகள்....


படிப்பவர்கள், முடிவெடுக்க வேண்டியது அவசியம்....

மக்களை சாதியின் அடிப்படையில் அடிமைகளாக நினைக்கும் ஒரு பிரிவினர்.... அதாவது தங்களை உயர்ந்தவர்கள் பிறர் தாழ்ந்தவர்கள் என்று நினைத்து அவர்களோடு உறவாடுவதை... திருமணம் செய்து கொள்வதை... அப்படிச் செய்தால் கொல்வோம் , கலவரம் செய்வோம், கண்ணசைப்போம்,  கருமாதி செய்வோம் என்று கூட்டம் கூட்டி மனிதர்களைக் கூறு போட நினைக்கும் இவர்களுக்கு .... மனித உரிமை பற்றிப் பேசுவதற்கான அருகதை இருக்கிறதா என்று....

வாசகர்கள் நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும்... நான் ஒன்றும்  சொல்வதற்கில்லை .


Saturday, May 4, 2013

வெளிவரும் காங்கிரசுகளின் கொடூரம்


  • சிறைவாசம் செல்வதற்கு ஏற்கனவே நான்கு வார அவகாசங்களை வழங்கியிருந்த நீதிமன்றம் இப்போது மேலும் நான்கு வாரங்களை உச்ச நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு வழங்கியிருக்கிறது. ரூ. 278 கோடிகள் மதிப்பிலான மீதியிருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதற்காக 'மனிதாபிமான' அடிப்படையில் வழங்கப்பட்டிருக்கிறதாம்.
    • மனிதாபிமானம் என்பதற்கான புதிய விளக்கம். இதுபோல பல வார்த்தைகளுக்கு புதிய விளக்கம் கொடுக்கத் தயாராய் இருக்கிறோம் என்று அறிவிப்புதான் இது.
  • டெல்லியில் ஐந்து வயதுப் பெண் மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப் பட்ட குழந்தையின் குடும்பத்திற்கு ரூ. 2000 கொடுத்து வழக்கு தொடுக்க வேண்டாம் என்று கேட்டிருக்கிறார்கள்.
    • ?????????????
  • நரேந்திர மோடியை விமர்சித்த பிறகு நித்திஷ் குமார் அரசிற்கு, மத்திய அரசு 12,000 கோடி பின்தங்கிய பகுதிகளுக்கு உதவும் நிதி வழங்க முடிவு செய்திருக்கிறது. நாட்டின் நலன் மட்டுமே கருதி இந்த முடிவை உண்மைக்கும் நீதிக்கும் சொந்தக் காரரான காங்கிரஸ் கட்சி எடுத்திருக்கிறது.
    • ஸ்டாலின் வீட்டில் உண்மையாய் ரெய்டு நடத்திய மாதிரி.........
  • 29 வயதான கிருஷ்ணா என்கிற காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் [கர்நாடகா] தனது சொத்து மதிப்பு ரூ. 910 கோடிகள் என்று   தெரிவித்திருக்கிறார். 
    • ஏழைகளின் நண்பன் காங்கிரஸ் என்று உலகுக்கு உணர்த்துவதற்காகவும், ஏழை இளைஞர்களுக்கு மிகப் பெரிய க்ரியா ஊக்கியாக இருப்பதும் தான் அவரது வாழ்க்கை இலட்சியமாம்.
  • பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப் படுவதற்கு பெண்களின் பார்வையே காரணம் என்று சத்யதேவ் கட்டாரே என்கிற காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒரு தலைவர் [மத்தியப் பிரதேசம்] சொல்லியிருக்கிறார்.  
    • எல்லாப் பெண்களின் கண்களையும் குருடாக்க வேண்டும் என்றுதான் சொல்ல நினைத்தாராம்...   என்று விட்டு விட்டாராம்.
  • பாலியல் பலாத்காரம் டெல்லியில் மட்டுமா நடக்கிறது .... எல்லா இடங்கலிலும் தான்... பாலியல் பலாத்காரத்தை கட்டுப் படுத்துவதுதான் உள்துறை அமைச்சகத்தின் வேலையா என்று அறிவுப் பூர்வமாகக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த [உத்திரப் பிரதேசம்] ஒரு அமைச்சர் கூறியிருக்கிறார். 
    • கடற்படைக்கு மீனவர்களைக் காப்பதுதான் வேலையா? உள்துறைக்கு மக்களைக் காப்பதுதான் வேலையா... நிதி அமைச்சகத்துக்கு விலைவாசியைக் கட்டுப்படுத்துவதான் வேலையா ... சீனர்கள் ஊடுருவாமல் தடுப்பதுதான் இராணுவத்தின் வேலையா .... என்றெல்லாம் கேட்க நினைத்தாராம்...
  • தெற்கே தினம் தினம் தமிழக மீனவர்களைக் கொள்ளும் இலங்கையிடம் அமைதி... பத்தொன்பது கிலோ மீட்டர் வரை ஊடுருவிய சீனர்களிடம் பேச்சு வார்த்தை ... பாலியல் தீவிரவாதச் செயல்களுக்கு எதிராக நீதி கேட்ட பெண்ணிடம் மட்டும் 'அறை' --- 
    • என்ன வீரம் சார்... என்ன கொடுமை சார்?


Thursday, April 25, 2013

உலகம் - மனிதம் - 1


நாம் வாழும் உலகம், இயற்கை என்பது உருவானதா அல்லது உருவாக்கப்பட்டதா என்ற விவாதத்தை நாம் தொடர வேண்டிய அவசியம் இல்லை.

இயற்கை எப்படி இருக்கிறது என்பதை மட்டும் நாம் சிந்தித்தால் நல்லது.

அறிவியலாளர்கள் சொல்வதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். அவர்கள் சொல்லும் அடிப்படைக் கருத்துக்களை யாரும் மறுக்கவும் முடியாது.
உலகம் எப்படித்தோன்றியது என்று அவர்கள் சொல்லும் கருத்துருவிலும், பரிணாமவாதத்திலும் நமக்கும் அடிப்படையில் உடன்பாடு உண்டு.

ஆனாலும் அதன் தொடர்ச்சிகள், அதன் விளைவுகள் எந்த அளவிற்கு நமது வாழ்க்கைக்கு உதவும் என்பது ஒரு புறம் இருந்தாலும்,
அது கொணரும் கேள்விகளும் நிறைய இருக்கின்றன என்பதைத்தான் நாம் முன் வைக்க நினைக்கின்றோம்.

இதனை மிகவும் விரிவாகவே மெய்யியலாலர்களும், இன்னும் அறிஞர்களும் பல்வேறு கோணங்களிலிருந்து விவாதித்து, பல விளைவுகளையும், எதிர் மறையான முடிவுகளையும் முன்வைக்கிறார்கள்.
அது நமக்குத் தேவையற்றது.

இக்கட்டுரையின் நோக்கம் மிகவும் அடிப்படையானது. இவ்வுலகில் நமது இருப்பின் பொறுப்புனர்வைப் பற்றி பேசுகிறது.
அதற்கான சில கேள்விகளை முன்வைக்கிறது. அவ்வளவே!

இயற்கைக்கு நோக்கம் ஒன்றும் இல்லை. அதுவாகத் தோன்றியது. அதுவாக இருக்கிறது. அதுவாக மறையும் - என்ற கொள்கையோடு பலர் நமது மத்தியில்  இருக்கிறார்கள்.
அவர்கள் அப்படித்தான் சொல்கிறார்கள். அதில் படித்தவர்களும் உண்டு, படிக்காதவர்களும் உண்டு.


கோடிக்கணக்கான ஆண்டுகளாய் நெருப்புப் பிழம்பாய் இருந்தது பின் பிரிந்து
(எதிலிருந்து நெருப்பு வந்தது என்று கேட்கக் கூடாது)
அதன் பிறகு குளிர்ந்து, நீர் வந்து, மரங்கள் தோன்றி
அதன் பிறகு ஒன்று இரண்டு என உயிர்கள் தோன்றி, அது


பலதாய் பெருகிஇத்தகைய சூழ் நிலைகளுக்கு ஏற்ப
எதெல்லாம் ஈடு கொடுக்க முடிந்ததோ அவைகள் வாழ்ந்து -
பின் வாழ முடியாதவைகள் எல்லாம் மடிந்து -
இறுதியில்,
இயற்கையின் போக்கிற்கு ஈடு கொடுக்க முடிந்தவைகள் மட்டும் உயிர் வாழ்கின்றன.
அப்படி வாழ்ந்த உயிரினங்கள் பரிணாம வளர்ச்சியில் பல நிலைகளைக் கடந்து மனித உயிர்கள் தோன்றி -
நாம் இன்று இருக்கக் கூடிய நிலையை அடைய கோடிக்கணக்கான ஆண்டுகள்ஆகிவிட்டன.


இதனடிப்படையில், பலர் தங்கள் வாதங்களையும் முன் வைக்கிறார்கள்.
இதில் எதுவுமே ஒரு நோக்கத்தோடு நடை பெற வில்லை.
அதுவாய்த் தோன்றியது. அதுவே நடந்தது.
மனித உயிர்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்பது
இயற்கையின் நோக்கம் அல்ல.
காலப் போக்கில் அது நடந்தது. பரிணாம வளர்ச்சியில் இது நடந்ததே தவிர இதற்கு நோக்கம் கற்பிப்பது அபத்தம் என்று சொல்கிறார்கள்.

ஒன்றிலிருந்து ஒன்று தோன்றியது... சூழல் அவைகளை வாழ வைக்கிறது. புதிய உயிர்களை தோற்றுவிக்கிறது. அதைத்தாண்டி எப்படி உயிரினம் தோன்றுகின்றன என்று யோசித்தால் - பலம் மிக்கவை வாழ்கின்றன. பலமற்றவை வீழ்கின்றன. இதைத் தாண்டி ஒன்றும் இல்லை என்கின்றனர்.

அப்படித்தானா?

தொடரும்....